Tuesday, December 16, 2014

நல்லாட்சிக்கும் வாஜ்பாய்க்கும் என்னய்யா சம்பந்தம்?





எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவர் பற்றி எனக்கு எழுத விருப்பமில்லையென்றாலும் வேறு வழியில்லாமல் எழுத வேண்டிய அவசியத்தை உருவாக்கி விட்டார்கள்.

டிசம்பர் 25 ம் தேதியை நல்லாட்சி தினமாக கொண்டாட வேண்டுமாம். ஏனென்றால் அன்றுதான் வாஜ்பாய் பிறந்தாராம்.

முதலில் நல்லாட்சி என்பது செயலில் காண்பிக்க வேண்டிய ஒன்று. காட்டாட்சி நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்லாட்சிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கமே இவர்கள் நடத்துவது மோசமான ஆட்சி என்பதற்கான அடையாளம். இன்னொன்று ஆட்சிக்காலம் முழுதுமே நல்லாட்சி நடத்த வேண்டியது ஒரு அரசின் கடமை. ஒரு நாளோடு முடிந்து போகிற விஷயமில்லை. ஆறு மாதங்களாக நல்லாட்சி நடத்தவில்லை என்பதன் ஒப்புதல் வாக்குமூலமாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

சரி, நல்லாட்சி தினமாக அனுசரிக்கக் கூடிய விதத்தில் வாஜ்பாயின் ஆட்சி இருந்ததா என்ன?

இல்லை, இல்லை, இல்லவேயில்லை என்று உரக்கச் சொல்லலாம்.

பதிமூன்று நாட்கள், பிறகு பதிமூன்று மாதங்கள், அதன் பின்பு ஐந்து வருடங்கள் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அப்படி என்ன சாதித்தார்?

பதிமூன்று நாட்களின் கடைசி நாளில் அவர் கையெழுத்திட்ட இரண்டு கோப்புகளுமே மோசமானவை.

தேர்தல் பிரச்சாரத்தின்போது எண்ரான் அனல் மின் நிலையத்தை அரபிக்கடலில் வீசியெறிவோம் என்று சொல்லி விட்டு அந்த நிறுவனத்திற்கு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கும், அவர்களுக்கு எந்த நஷ்டமும் வராமல் இருக்க Counter Guarantee Agreement ல் கையெழுத்து போட்டவர் அவர். மும்பை கலவரங்கள் தொடர்பான கிருஷ்ணா கமிஷனுக்கு மூடு விழா நடத்தியவர். பதவி விலகுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக மோசமான முடிவுகளை எடுத்தவரின் ஆட்சிக்கு நல்லாட்சி என்றுதான் மோடியின் அகராதியில்தான் அர்த்தம் போலும்.

பதிமூன்று மாத காலத்திலும் பிறகு ஐந்தாண்டு காலத்திலும் லாகூருக்கு பஸ்ஸில் பவனி சென்றார். அது வெறும் இன்பச்சுற்றுலாவாகவே நடந்து முடிந்தது. கார்கில் பகுதியில் ஊடுறுவல் நடந்துள்ளது என்பது கூட தெரியாத அளவிற்கு விழிப்பாக இருந்த ஆட்சி அது. ஒரு புறத்தில் மக்களின் உணர்வுகளைத் தூண்டிக் கொண்டே இன்னொரு புறம் வீர மரணம் அடைந்த சிப்பாய்களுக்கு சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் செய்து காசு பார்த்த ஆட்சி அது.

போருக்குப் பிறகு இந்தியா வந்த பர்வேஸ் முஷாரப்போடு ஒரு அமைதி ஒப்பந்தம் உருவாகியிருக்க வேண்டிய நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மிரட்டலுக்கு அடி பணிந்து பல்டி அடித்து பதட்டம் நீடிக்க வழி வகுத்தது வாஜ்பாயின் நல்லாட்சி.

லாபகரமாக இயங்கிய யூனிட் ட்ரஸ்ட் நிறுவனத்தை மோசமான கம்பெனிகளின் பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்க வைத்து அந்த நிறுவனத்தையே முடமாக்கிய பெருமையும் பெரியவர் வாஜ்பாயின் சாதனைதான். அந்த பேரத்தில் பலனடைந்தது வாஜ்பாயின் வளர்ப்பு மருமகன் (பெயர் ஏதோ பட்டாச்சார்யா என்று வரும்) என்பது அதில் முக்கியமான தகவல். யூனிட் ட்ரஸ்ட் நிறுவனத்திற்கு உத்தரவு போட்டது வாஜ்பாயின் நம்பகத்திற்குரிய பிரிஜேஷ் மிஷ்ரா.

இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதித்ததும் வாஜ்பாய் ஆட்சியில்தான். இன்சூரன்ஸ் துறையில் தனியார் கம்பெனிகள் அனுமதிக்கப்பட்டால் ஒரு வருடத்திற்குள் அன்னிய மூலதனமாக பல லட்சம் கோடி ரூபாய் வரும் என்று நாடாளுமன்றத்தில் கூறினார். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் வந்தது எட்டாயிரம் கோடி ரூபாய்க்கும் கீழேதான். வாஜ்பாய் சொன்ன அதே கதையை இப்போது மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பொதுத்துறை நிறுவனங்களை அப்படியே தனியார் கம்பெனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று தேசத்தின் சொத்துக்களை தாரை வார்த்த பெருமை வாஜ்பாயுடையது. அதற்கென்று அருண் ஷோரி என்று ஒரு மந்திரி, Strategic Sale என்று அதற்கு ஒரு பெயர் வேறு.  பாட்டன் சொத்தை பேரன் விற்று விரயம் செய்தால் ஊதாரி என்று திட்டுவோம். ஊதாரித்தனத்திற்கு மோடியின் ஆட்சியில் நல்லாட்சி என்று பெயர்.

தங்க நாற்கர சாலை என்பது வாஜ்பாயின் கனவுத்திட்டம் என்று இன்னும் பீற்றிக் கொண்டிருக்கிறார்கள். சாமானிய மனிதர்களுக்கான சாலை அல்ல அது. முதலாளிகள் உற்பத்தி செய்த பொருட்கள் துறைமுகத்திற்கோ அல்லது சந்தைக்கோ விரைந்து செல்ல செய்யப்பட்ட ஏற்பாடு அது. அதே நேரம் சாலை போட செலவழிந்த தொகையை விட பல மடங்குக் கட்டணத்தை சுங்கச்சாவடிகளில் வசூல் செய்து விட்டார்கள். பல இடங்களில் இப்போது சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்தாலும் சுங்கக் கட்டணம் உயர்த்துகிறார்கள். தங்க நாற்கர சாலைகளை தனியார் நிறுவனங்களுக்கான தங்கச் சுரங்கமாக மாற்றியது வாஜ்பாயின் நல்லாட்சி.

ஆயுத பேர ஊழல் முதற்கொண்டு பங்காரு லட்சுமணன் காமெரா முன்பு லஞ்சம் வாங்கியது வரை எல்லாம் இந்த நல்லாட்சியில்தான்.

இவை எல்லாவற்றையும் விட “இனி நான் எந்த முகத்தோடு வெளி நாடுகளுக்குச் செல்வேன்” என்று அண்ணன் வாஜ்பாயே புலம்ப வைத்த குஜராத் கலவரம் நடந்து ரத்த ஆறு ஓடியது அவரது நல்லாட்சியில் என்பதை மறக்காதீர்கள் மக்களே. பிணங்கள் குவிந்து கொண்டிருந்த போது அதை ரசித்து  வேடிக்கை பார்த்த நல்லாட்சி தந்தவர் வாஜ்பாய்.

“ஒளிரும் இந்தியா” என்ற வாஜ்பாயின் பொய் முழக்கத்தை ஏற்றுக் கொள்ளாத “துன்பத்தில் உழலும் இந்தியர்கள்” அவரது ஆட்சியைத் தோற்கடித்த பின்னும் “வாஜ்பாயின் நல்லாட்சி” என்று சொல்வதற்கு உண்மையிலேயே மனத் துணிவு வேண்டும்.

இந்த நல்லாட்சி தினத்திற்கும் வாஜ்பாயிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் துடைப்பம் தூக்கி நாடகத்திற்கும் இதற்கும் மட்டும் தொடர்பு உண்டு.

ஆம், காந்தி ஜெயந்தியன்று காந்தியின் புகழை யாரும் பேசக் கூடாது என்பதற்காக துடைப்பம் தூக்கி நாடகம். கிறிஸ்துமஸ் அன்று ஏசுவைப் பற்றி நினைக்கக் கூடாது என்பதற்காக நல்லாட்சி தின நாடகம்.

இந்த நச்சுப் பாம்புகளோடு நாம் இன்னும் எத்தனை காலம் கழிக்க வேண்டுமோ



3 comments:

  1. இந்த நச்சுப் பாம்புகளோடு நாம் இன்னும் எத்தனை காலம் கழிக்க வேண்டுமோ ....nearly 10 more years...

    No Way....

    Seshan

    ReplyDelete
  2. ஆமாம் "இந்தியா ஒளிர்கிறது" என்பது வாஜ்பாயின் வெற்றுக் கூச்சல்.

    இந்தியாவில் உருவாக்குவோம், தூய்மை இந்தியா, நல்ல நாள் வருகிறது ஆகியவையெல்லாம் மோடியின் வெற்று முழக்கம்.

    மிகச் சரியாக சொன்னீர்கள் அனானி.

    காவிக்கூட்டம் கூட்டத்தில் மனசாட்சியுள்ள மனிதனய்யா நீர்

    ReplyDelete